• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

Byவிஷா

Jan 3, 2025

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எம்பி கதிர் ஆனந்த் இல்லத்திலும், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் காட்பாடி, காந்தி நகரில் தமிழக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது. இன்று காலையில் திடீரென சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதிர் ஆனந்த் அதே வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை சோதனையின் காரணமாக சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலையில் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளராக பூஞ்சோலை சீனிவாசன் இருந்து வருகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில், 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகனுக்கு பூஞ்சோலை சீனிவாசன் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எதற்காக சோதனை? கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அதே காலக்கட்டத்தில் பூஞ்சோலை சீனிவாசன் தொழிற்சாலையில் இருந்து 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் கணக்கில் காட்டப்படாத இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் இன்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் தொழிற்சாலையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.