• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அமுத்சுரபி அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை

ByKalamegam Viswanathan

May 21, 2023

ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே அமுத்சுரபி என்ற சிறு சேமிப்பு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. சேலத்தை தலைமையிடமாக கொண்டு, ஜெயவேல் என்பவர் தலைமையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
ராஜபாளையத்தில் செயல்பட்ட நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வாடிக்கையளர்களிடம் நேரடியாக சென்று தினசரி வசூல் செய்து வந்துள்ளனர். ரூ. 100 முதல் ஆயிரம் வரை செலுத்தும் மக்களுக்கு, குறிப்பிட்ட நாட்களின் நிறைவில் அசலுடன் ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
எனவே நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களில் கடை வைத்திருப்பவர்கள், உணவகங்கள் நடத்துபவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சிறிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் 2 வருடங்கள் மக்கள் செலுத்திய அசல் தொகையுடன், ஊக்க தொகையும் வழங்கிய நிறுவனம் கடந்த ஆண்டுக்கான தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சேலத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் நிதி நிறுவனம், ஜெயவேல், தங்கப்பழம், பிரேம் ஆனந்த், சரண்யா உள்ளிட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார்.


இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் பூட்டப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது வரை பணம் திரும்ப கிடைக்கவில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் அலுவலகத்தை திறந்தனர். ஆய்வாளர் மலர்விழி தலைமையில் 5 அதிகாரிகள் அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரம், கணக்கு புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையின் நிறைவில் அலுவலகத்தில் இருந்த ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து சென்றனர்.அலுவலகம் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும், பணம் செலுத்திய 40க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை சுற்றி திரண்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒரு சிலர் தங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.