புதுக்கோட்டையில் தமிழ்நாடு கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார் என்று நான் பார்க்கிறேன்.

அவர் கொடுத்த வாக்குறுதி அவரது காலத்திலேயே நிறைவேற்ற முடியாதது ஆகும். அவர் நிறைவேற்ற முடியாது என்று சொன்ன வாக்குறுதிகள் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அன்றைக்கு திமுக தலைவர் தளபதி மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னபோது விளங்க முடியாது என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் பெண்களுக்கு இலவச பயணம் வழங்குவது சாத்தியமில்லை என்று சொன்னவர் இன்று ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவச பயணம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார் என்றால் அவர் முழுக்க முழுக்க பொய் சொல்லுகிறார். அவரால் எதுவும் நிறைவேற்ற முடியாது. அவரது காலத்தில் எதுவும் நிறைவேற்றவில்லை.
கரூரில் செய்தியாளர்களை எம்எல்ஏ பழனியாண்டி தாக்கி இருக்கிறார் என்ற தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் நடிகர் விஜய் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார் என்றால் அவர் திருக்குறளையும் மொழிபெயர்ப்பார், என்ன வேண்டுமானாலும் ஆட்டம் ஆடுவார், என்ன வேண்டுமானாலும் பாட்டு பாடுவார். நடிப்பார், டான்ஸ் ஆடுவார், ஆனால் மக்களிடம் வாக்கு வாங்க முடியாது. தேர்தலில் சுயேட்சை கூட நான் வெற்றி பெறுவேன் என்று தான் சொல்வான். ஐந்து வாக்குகள் கூட வாங்க முடியாதவனும் நான் வெற்றி பெறுவேன் என்று தான் சொல்வான். ரிசல்ட் வரும்போது தான் தெரியும் அவர்கள் வாங்கிய வாக்கு. அதே போல தான் இவர்களது நிலைமையும் ஆகும். ரிசல்ட் வரும் அன்றைக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இணக்கமில்லாத போக்கு இருப்பதாக பத்திரிகையாளர்கள் தான் சொல்கிறீர்களே தவிர அப்படி எதுவும் இல்லை. நாங்கள் குழு அமைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை நடக்கும் என்று எங்களது தலைவர் முதல்வர் சொல்லியிருக்கிறார்.
யாராவது ஏதாவது பேசுகிறார்கள் என்றால் அங்கே இருந்து வெளியே போக வேண்டும் என்று நினைப்பவர்களும் பேசுவார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் பேசுவார்கள். ஆனால் எங்களது கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக நாங்கள் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு வெற்றி என்பது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். வேறு எங்கு சென்றாலும் அவர்களுக்கான சீட்டு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும் என்றார். அவர் பேட்டி அளித்த போது கட்சி பொறுப்பாளர்களுடன் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் உடன் இருந்தார்.










