ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்குக்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய அதே சமயம் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ட்விட்டரை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தில் தனக்குள்ள 21 பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகளை எலன் மஸ்க் விற்கக்கூடும் என முதலீட்டாளர்கள் அச்சப்படுவதால், டெஸ்லாவின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 126 பில்லியன் டாலர் வீழ்ச்சியை சந்தித்தன. ட்விட்டருடனான ஒப்பந்தத்தில் டெஸ்லா சம்மந்தப்படவில்லை என்றாலும், ட்விட்டரை வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதே போன்று, ட்விட்டரின் பங்குகளும் 3.9% சரிந்து $49.68 ஆக முடிவடைந்தது. இருப்பினும், எலன் மஸ்க் ட்விட்டரின் ஒரு பங்கை $54.20 என வாங்கியுள்ளார். டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தால் எலான் மஸ்க்கிற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குகள் வீழ்ச்சி குறித்தும், ட்விட்டரை வாங்குவதற்காக எலான் மஸ்க் தனது பங்குகளை விற்பாரா என்பது குறித்த கேள்விக்கும் டெஸ்லா நிறுவனம் பதிலளிக்கவில்லை.