தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் கண்மாய்களுக்கு தண்ணீர் நிரப்ப வரும் 26 ஆம் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 70.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து திண்டுக்கல் ,மதுரை மாவட்ட பாசன பகுதிகளுக்கு வினாடிக்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது அதே போல் குடிநீர் திட்டங்களுக்காக 69 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 832 கனஅடியாக உள்ளது.142 அடி உயரமுள்ள பெரியாறு அணை தற்போது 135. 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1089 கன அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 933 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பூர்வீக விவசாய ஆயகட்டுக்காரர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள கண்மாய்களை பாசன வசதிக்காக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக அரசு வரும் 26ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறினார்கள்.