• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்திய தமிழ்நாடு அரசு

Byவிஷா

Sep 8, 2025

கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இந்த ஆண்டு ரூ.349 உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையுடன், மாநில அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் அரவை திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, மத்திய அரசின் விலைக்கு மேல் மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு முதல், சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம், விவசாயிகளுக்கு நேரடிப் பணப்பலன் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் உயர்ந்து வரும் இந்த ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2020-21-ல் ரூ.192.50 ஆக இருந்த ஊக்கத்தொகை, 2023-24-ல் ரூ.215 ஆக உயர்ந்தது. தற்போது, 2024-25-ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.349 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை பெற தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவு, தனியார் அல்லது பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தங்கள் கரும்பை பதிவு செய்ய வேண்டும். இதற்கு தனியாக எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் ஊக்கத்தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவர்களின் நிதிச் சுமையையும் குறைத்து, கரும்பு சாகுபடியை மேலும் செழிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது.