அதிமுக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஏ.பி.நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தமாகாவை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜூடு தேவ் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அதேபோன்று தமாகாவைச் சேர்ந்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் எஸ்.ராம்குமார் மற்றும் தமாகா மாநில செயலாளர் அனுராதா அபி ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான மனோ தங்கராஜ், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், நா.எழிலன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.