• Tue. Feb 18th, 2025

சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றியை அதிநவீன தொலை நோக்கியுடன் நேரலையில் கண்டு மகிழ்ந்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

சந்திராயான்-3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எல்.வி.எம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஐந்து முறை உந்துவிசை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ல் நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதன் பிறகு நிலவின் சுற்றுவட்ட பாதையில் அதனுடைய வேகம் ஐந்து முறை படிப்படியாக குறைக்கப்பட்டு 163 x 153 கிலோமீட்டர் ஆக சுற்றுவட்ட பாதை நிலை நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17ல் உந்துவிசை கலனும் தரையிறங்கியும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு தரையிறங்கி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் பிறகு ஊர்தி வெளிவந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

இந்த அரிய சரித்திர நிகழ்வை நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள், அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரடியாக கண்டு மகிழ்தனர். ராக்கெட்டுகள் மற்றும் சந்திராயான்-3 செயற்கைக்கோள் மாதிரிகள் மூலம் செயல்படும் விதம் விளக்கப்பட்டது. மேலும் அதிநவீன தொலைநோக்கி மூலம் நிலவையும் கண்டு மகிழ்ந்தனர். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமரராமன், கல்லூரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறை தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து இஸ்ரோக்கும், அதில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனனர். இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்வை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை உடன் இணைந்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல் சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல்பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், ஆகியவை நடத்தியது.