தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டத்தை 01.01.2026 முதல் அமல்படுத்த 10 ஜனவரி 2026 அரசாணை வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) 50 விழுக்காடுத் தொகையை ஓய்வூதியமாக உறுதி செய்துள்ளதை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.
அதே நேரத்தில் சில அரசு ஊழியர்கள் தற்போது அரசு அறிவித்துள்ள திட்டத்தின் மூலமாக தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கீட்டுத்தாள்களை வெளியிட்டு முகநூல்களிலும் சமூக வலைதளங்களும் பகிர்ந்து வந்தனர் இதற்கு ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் தற்போதைய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், பங்களிப்பு தொகையினை முழுமையாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் இந்த அரசாணை வழங்கியுள்ளதற்கும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பின்வரும் அம்சங்கள் ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன,
ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவுள்ள அகவிலைப்படி (DA) உயர்வு,
ஓய்வூதியதாரர் மறைவிற்குப் பிறகு, குடும்பத்தினருக்கு 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வின் போது வழங்கப்படும் ரூ. 25 லட்சம் வரையிலான பணிக்கொடை (Gratuity), ஊழியர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தில் 33.33% (மூன்றில் ஒரு பங்கு) வரை ஓய்வு பெறும் போது தொகுத்துப் பெற்றுக்கொள்ள (Commute) அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த அரசாணை மூலம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) இருந்து வந்த ஊழியர்களுக்கு, நிலையான ஓய்வூதியத்தை உறுதி செய்ததற்காகவும், இதற்காகக் கூடுதல் நிதிச் சுமையை அரசே ஏற்க முன்வந்திருப்பதற்கும் தமிழ்நாடு அரசிற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வருக்கு கோரிக்கை:
இத்திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களின் மாதாந்திர ஊதியத்தில் 10 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம்,

”ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்புத் தொகையில் ஒரு பகுதியை, ஊழியர்களின் பெயரிலேயே அமையும் தனிப்பட்ட சேமநல நிதி (Provident Fund) கணக்கில் சேமிப்பாக மாற்றம் செய்திட வேண்டுகிறோம், இதன் மூலம் ஊழியர்கள் தங்களின் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காகவும், பணிக்காலத்தில், நிதி பாதுகாப்பிற்கும் அந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அரசு பள்ளி ஆசிரியர் ஆ.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.




