காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் மாநாடு துவக்க விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆன்மீக கொடியேற்றி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.விழா துவக்கம் முன்னிட்டு கஜ பூஜை மற்றும் கோபூஜை உடன் மாநாடு துவங்கியது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் வரும் மார்ச் 6-ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. ஸ்ரீ சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு வரும் 6ம் தேதி காலை 8 24க்கு பெயர்ச்சி அடைகிறார். சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு திருநள்ளாறில் கடந்த ஒரு வாரம் சப்த நதி ஆராதனை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தன.

அதன் அடுத்த கட்டமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆன்மீகம் மற்றும் ஜோதிட வல்லுநர்கள் பங்குபெறும் மாநாடு நடைபெற உள்ளது. இன்று காலை திருநள்ளாறு வடக்கு உள்வட்ட புறவழிச்சாலையில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் மாநாடு துவக்க விழா முன்னிட்டு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மாநாட்டின் கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக கஜ பூஜை மற்றும் கோபூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை எடுத்து மாநாடு துவக்க விழாவில் தருமபுர ஆதீனம் மடாதிபதி, புது டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்,மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டினை துவக்கி வைத்தனர்.







