கரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது
கூடலூரை அடுத்துள்ள கரிய சோலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் சர்வதேச நகைச்சுவையாளர் மன்றத்தின் செயலாளர் அருண்குமார், ரெப்கோ வங்கி வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், உட் பிரேயர் தோட்ட துணை பொது மேலாளர் தினேஷ் குரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலக்கியம் மற்றும் கல்வியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி ஆசிரியை அமலா அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை யசோதா ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் வில்லுப்பாட்டு, கராத்தே , குங்ஃபூ , கிராமிய நடனங்கள் உள்ளிட்ட சிறப்பான கலை நிகழ்ச்சிகள் அங்கு கூடியிருந்த ஏராளமான பெற்றோர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜயகலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி, தற்காலிக ஆசிரியர்கள் மல்லிகா, விக்னேஷ்வரி, மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பிற பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் , ஊர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இடைநிலை ஆசிரியை திருமதி கல்யாணி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.