விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக இரவு பூக்குழி தீ மிதி திருவிழா சிறப்பாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவிற்கான கால் நாட்டு மற்றும் காப்புக் கட்டும் வைபவத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மாரியம்மன் காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கான கால் நாட்டும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகிகள் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பூசாரிகள் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அக்னி செட்டி பூக்குழி இறங்குதல் பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த டோக்கன் செலுத்தி பதிவு செய்து காப்புக் கட்டிக் கொண்டனர். விரதத்தை தொடங்கினர்.

இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருள்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் தினமும் இரவில் மாரியம்மன் பல்லக்கில் அமர்ந்து சாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதி உலா வருவார். பங்குனி பொங்கல் எட்டாம் நாளான பொங்கல் தினத்தன்று பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். இரவில் சாத்தூர் அதனைச் சுற்றியுள்ள வெங்கடாசலபுரம் படந்தால் அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முக்குராந்தல் பகுதியில் உள்ள அம்மன் திடலில் பொங்கல் வைத்து வழிபடுவர். பங்குனி பொங்கலின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடுநிசியில் நடைபெறும்.




