திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55) இவரது மனைவி பாண்டியம்மாள் தேவி (50) ஆகிய இருவரும் ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், செம்பட்டி வழியாக வத்தலகுண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் ஒரு லட்சத்தி ஒரு ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.

அப்போது, ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி மூலச்சத்திரம் என்ற இடத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனபாண்டி, காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயந்தி, காவலர் கரிகாலன் ஆகியோர் வீடியோகிராபர் உடன் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் ஒரு பேக்கில் எடுத்துச்செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்தி ஒரு ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், தனி துணை ஆட்சியமான ஞா.ஹென்றி பீட்டர், ஆத்தூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான முத்து முருகன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அதிகாரிகள் விசாரணையில் வத்தலகுண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரின் மருத்துவச் செலவுக்காக அந்த பணத்தை எடுத்துச்சென்றதாக பாண்டியம்மாள் தேவி அவரது கணவர் அண்ணாமலை தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆத்தூர் சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.



