கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் (ரேஷன் கடை) இருந்து மூட்டை, மூட்டையாக அரிசி சட்ட விரோதமாகக் கடத்தப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கும் அத்தியாவசிய அரிசி மூட்டைகள் முறைகேடாக வாகனங்களில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு ரேஷன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசியை ஏற்றிச் செல்லும் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டுச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்குச் சென்று அரிசி கேட்கும் போது “அரிசி கையிருப்பு இல்லை” எனக் கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்பிவிடும் நிலையில், மூட்டை, மூட்டையாக அரிசி கள்ளச்சந்தைக்குக் கடத்தப்படுவதைப் பார்த்து அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர்.
வீடியோ ஆதாரத்துடன் இந்த அநியாயம் அம்பலமாகி உள்ளதால், குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டுச் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவாரம்பாளையம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




