சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்தவர் மாதவன் வயது (32). கொத்தனார். இவரது வீட்டின் அருகே 8 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். மாதவன் அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, தனது வீடு , மூங்கில் புதர், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.
இந்த நிலையில் சிறுமியை அவரது பாட்டி, குளிப்பாட்டி கொண்டிருக்கும் பொழுது சிறுநீர் கழிக்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இது குறித்து பாட்டி, சிறுமியிடம் கேட்டபோது, மாதவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் 28.06.2021 அன்று நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்கும் படியும் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாதவனை கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.






