• Thu. May 15th, 2025

30 வது தேசிய மாநாடு இறுதி பொதுக் கூட்டம்..,

ByR. Vijay

Apr 17, 2025

அகில இந்திய விவசாயிகள் சங்கம் 30 வது தேசிய மாநாடு நாகையில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்வு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவர் இராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் தொடங்கியது.

இதில் தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மைதுறை அமைச்சர் பி.பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்றனர். இந்த உள் அரங்க மாநாட்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட இந்தியாவின் 30 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் 697 பேர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் சிறுபான்மை உரிமைகளை மீறும் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், சத்திஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளை இராணுவ மண்டலமாக மாற்றியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வரிகள், விவசாய வர்த்தக அழுத்தம் கண்டிப்பது, பிஹாரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு புரட்சிகர விவசாய சங்க தலைவர் சுவாமி சகஜானந்த் சரஸ்வதியின் பெயரை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டின் கடைசி நாளான இன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய பொதுச் செயலாளராக ஆந்திராவைச் சேர்ந்த ராவுல வெங்கையா வும், தலைவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இராஜன் கிஸ்சி சாகரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநாட்டின் கடைசி நாளான இன்று நாகை காடம்பாடியில் பொதுக் கூட்டம் நடைப்பெறுவதையொட்டி நாகை அவுரித்திடலில் இருந்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் செங்கொடியை ஏந்தியவாறு அணிவகுத்து முழக்கங்களை எழுப்பியவாறு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று பொதுக் கூட்டம் நடைப்பெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், நாகை எம்பி செல்வராஜ், திருப்பூர் எம்பி சுப்ராயன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய அளவில் நடைப்பெறக் கூடிய இந்த மாநாட்டின் பொதுக் கூட்டம் இந்திய அளவில் முக்கிய தீர்மானங்களை பிரகனப் படுத்தும் என்பதால் இந்திய அளவில் கவணம் பெற்றுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு ஒருங்கிணைந்த கீழ தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை பகுதியில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.