“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார்” என, தேனியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.
தேனி மாவட்டத்தில் நேற்று (டிச.29) காலை 9 மணிக்கு தேனி உழவர் சந்தை ஆவின் பாலகத்தில் நெய், பால்கோவா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா, என அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சிப்காட்டில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்திற்கு சென்று பாலின் தரம் மற்றும் அங்குள்ள அதிகாரிகளிடம் குளிரூட்டும் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் ஆவினில் நடந்த ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜயபாஸ்கர், வேலுமணி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை வழக்கு உள்ளது. சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.83 கோடி சிக்கியது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சில முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் அடங்கும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் பல வழக்குகள் உள்ளன. தீபாவளிக்கு ஒரு ஆவினில் ஒன்றரை டன் வீதம் 8 யூனியனில் இனிப்பு எடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதனால் அவர் செய்த ஊழல் தினம் தினம் வெளிவருகிறது. இதுதொடர்பாக அவரை 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். விரைவில் கைது செய்து செய்யப்படுவார். விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரும். இவ்வாறு அவர் கூறினார்.