விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் வகுப்புகள் நடத்துவதுடன், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களைத் துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தி வருவதாக புதுச்சேரி கல்வித்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது. இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.