• Mon. Apr 21st, 2025

கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி

ByR. Vijay

Mar 20, 2025

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கடைத்தெரு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில்  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் இரண்டு கழிவறைகள் புதிதாக கட்டப்பட்டன.

இதனை இப்பகுதியில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாததால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி அவ்வழியே செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக செப்டிக் டேங்க்-யில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும்‌ அப்பகுதியினர், கழிவறையை மறுசீரமைப்பு செய்து முறையாக கழிவுநீர் வெளியேறாத அளவிற்கு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.