• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Sep 13, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் மார்நாட்டான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்டது. அப்போது பல இடங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டும், மின்கம்பிகள் குடிநீர் குழாய் பைப்புகள் சேதமடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள் மின் ஒயர்கள் குடிநீர் குழாய்கள் மற்றும் பைப்புகள் சரி செய்யப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக தெருக்களிலும், சாலையின் நடுவிலும் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. பல இடங்களில் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்படாத நிலையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஊராட்சி நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

மேலும், மின்சார துறையினர் எடுத்த நடவடிக்கையால் ஆங்காங்கே மின் ஒயர்கள் அருந்த நிலையில் மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து, மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தபோது, மின்கம்பங்களை சரி செய்ய பணம் கட்டினால் மட்டுமே செய்ய முடியும் என மின்சார துறை அதிகாரிகள் கூறியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு பணம் செலவழித்த நிலையில் அதை சரி செய்வதற்கு எப்படி பொதுமக்கள் பணம் அளிக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முள்ளிப்பள்ளம் ஊராட்சி பொதுமக்களுக்கு மின்சாரம் குடிநீர் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மார் நாட்டான் கூறுகையில், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக எடுக்காததால் பல இடங்களில் தற்போதும் ஆக்கிரமிப்புகள் இருந்து வருவதுடன் நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும் எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதால் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலை துறையினர் நேரில் ஆய்வு செய்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.