திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அந்த பதிவில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு: 19 -ன் படி தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் நியமனம் தலைமைக் கழக அறிவிப்பு தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர் . பழனிவேல் ராஜன், அவர்கள் அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, கழகத் தலைவர் அவர்களிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
அவரின் அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு : 19 – ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு. டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., ( எண். 1202, 6 வது அவென்யூ, ‘இசட்* பிளாக், அண்ணா நகர், சென்னை – 600 040.) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக அயலக அணிச்செயலாளராக அப்துல்லா எம்பி நியமனம் செய்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.