• Mon. Apr 29th, 2024

பண்டிகை நேரத்தில் போராட்டம் முறையற்றது : உயர்நீதிமன்றம்..!

Byவிஷா

Jan 10, 2024

பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது முறையற்றது என்றும், மக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது.
வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?, அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாக இருக்கிறீர்கள், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன சிக்கல்? எனவும் இருதரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர்.
பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றனர் என தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *