• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தூண்டில் வளைவு பாலத்தை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தூத்துக்குடியில் அனைத்து மீனவ சங்கங்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர் சங்கங்கள், திரேஸ்புரம் சிறுவியாபாரிகள் சங்கம், திரேஸ்புரம் ஊர்நலக்கமிட்டி ஆகியவை இணைந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப்படகு பஞ்சாயத்தார் ஜெகன் தலைமை தாங்கினார். ஜனநாயக சங்குகுளிப்போர் தொழிலாளர் சங்கம் மம்மது முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரண்டு பகுதிகளாக தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு பகுதி 1050 மீட்டர் தூரம் வரையும் மற்றொரு பகுதி 538 மீட்டர் தூரம் வரையும் அமைக்கப்பட்டது. ஆனால் 538 மீட்டர் அமைக்க வேண்டிய இடத்தில் சுமார் 250 மீட்டர் மட்டுமே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. மீதம் உள்ள 285 மீட்டர் தூரத்துக்கு போதிய நிதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. 

இதனால் இயற்கை சீற்றத்தின் போதும், காற்று காரணமாகவும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதனால் ஆண்டுக்கு ஒரு படகுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஆகையால் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் முழுமையாக, அதாவது மீதம் உள்ள பகுதியிலும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் ராபர்ட் உள்பட சங்க நிர்வாகிகள், நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு பாரம்பரிய நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜாபோஸ் ரீகன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகவும், வானிலை எச்சரிக்கை காரணமாகவும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.” கடந்த 4 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலூக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.