• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பிரபல தொழிலதிபர் இரு வாரத்திற்கு பின் உயிருடன் மீட்பு..,

ByKalamegam Viswanathan

Apr 20, 2025

மதுரை மாநகர் பீ.பி.குளம் அருகேயுள்ள நாராயணபுரம் குருநகர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கருமுத்து டி.சுந்தரம். இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் கருமுத்து டி.சுந்தரத்தின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் அபகரிக்க முயன்ற நிலையில் நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு தொடர்ந்திருந்துள்ளார்.

இந்நிலையில் கருமுத்து டி.சுந்தரத்திற்கே சாதகமாக தீர்ப்புகள் வர இருப்பதை அறிந்த மரியராஜ் சுந்தரத்தின் சொத்துக்களை மிரட்டி அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நண்பர்களின் உதவியுடன் தென்காசியை சேர்ந்த ரமேஷ், காரைக்குடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அழகு சுந்தரம், மயிலாடுதுறையை சேர்ந்த கிரிவாசன் ஆகியோர் வீட்டில் இருந்த கருமுத்து டி.சுந்தரத்தை பேச்சுவார்த்தை நடத்துவது போல கூறி காரில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் ஹார்டிஸ்ச்க்குகளை எடுத்துசென்றுள்ளனர்.

இதனையறிந்த கருமுத்து டி.சுந்தரத்தின் உறவினரான பெரியகருப்பன் என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை மீட்பதற்க்காக தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

அப்போது சுந்தரத்தை காரில் கடத்திசென்ற கும்பலானது சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு கடத்தி சென்று, அங்கிருந்து வேறொரு காரில் மயிலாடுதுறைக்கு சென்று ஜெனமேந்திரன் என்பவரின் காரை மறைத்துவைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த அருள்செல்வன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெனமேந்திரன் தென்காசியை சேர்ந்த அருள் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி. சுந்தரத்தை மீட்பதற்காக தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுபோது சுந்தரத்தை கடத்திசென்ற கும்பலானது மகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா பெங்களூர் போன்ற மாநிலங்களில் கொண்டுசென்ற நிலையில் அவர்களை தனிப்படை காவல்துறையினர் பின்தொடர்ந்து கைது செய்ய முயன்றபோது கடத்தல் கும்பலானது வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப தொடங்கி தருமபுரி, சேலம் திருச்சி வழியாக மதுரை நோக்கி வந்தனர்.

அப்போது தனிப்படை காவல்துறையினர் மதுரை பாண்டி கோவில் அருகே வந்த கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அழகு (42) மயிலாடுதுறையைச் சேர்ந்த கிரிவாசன் ( 46) ஆகிய இருவரும் பாலத்தில் இருந்து குதித்து தப்பியோடியபோது இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரையும் கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.