தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் முழு கரும்பு ஆகிய பொருட்கள் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புப் பொருட்கள் வழங்கப்படும் என தற்போது தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன்களை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் தகுதி வாய்ந்தவர்களுக்கு தரமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.