மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தினர். 5 பேரை பிடித்து நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான சுந்தர், மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது.
இதனிடையே சுந்தருக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் அளவிலான நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 14 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தருடன் அவரது கடை ஊழியர்கள் இருந்தபோதும் பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்வதாக கூறி சுந்தரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் இரவு ஆகியும் சுந்தர் திரும்பாத நிலையில் சுந்தரை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திசென்றதாகவும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். சுந்தரின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள. மற்றும் வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தி தற்போது 9 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சுந்தரை கடத்திய நபர்களின் செல்போன் எண் வடமாநில பகுதியில் இருப்பதும் தெரியவந்துள்ளதால் சுந்தரை மீட்பதற்காக தனிப்படை காவல்துறையினர் வடமாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
3 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுந்தர் நில விற்பனை விவகாரம் காரணமாகவோ? பணத்திற்காகாவோ? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து மதுரை தல்லாகுளம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி காவல் ஆணையர் அலுவலகம் வரை உள்ள முக்கிய பகுதியான மதுரை தல்லாகுளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணத்திற்காக வழக்கறிஞர் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளர். அடுத்தடுத்து ஆள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
