• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ வழக்குப் பதிவு !!

BySeenu

Apr 7, 2025

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் மத போதகராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (வயது 32). இவர் கேரளாவிலும் மத போதகம் செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் வீட்டு அருகே உள்ள 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து உள்ளது.

சிறுமிகள் வீட்டில் விளையாட வரும் போது எல்லாம் பாதிரியார் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டு சிறுமி பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கிறிஸ்தவ மத போதகர் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.