மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும் இணைந்து பள்ளியில் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மற்றும் ஓவிய கண்காட்சியை நடத்தினர். நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவி தமிழ் மாரி வரவேற்றார்.
புகைப்படக் கண்காட்சியை சிறப்பு விருந்தினர் சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பார்வையிட்டு வாழ்த்தி பேசினார். மாணவர்கள் தங்களது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், கலாச்சாரம், வணிகம் ஆகியன குறித்து அவர்களே எடுத்த புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. மேலும் இயற்கை, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏராளமான பெற்றோர்கள் வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டி பேசினர். கண்காட்சியை தொடர்ந்து மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் என்பதை மையமாக கொண்ட கருத்து கந்தசாமி என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. சிறப்பாக நடித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிடார் மைய ஒருங்கிணைப்பாளர் பால கார்த்திகேயன், சினிமோட்டோகிராபர் பொன்குன்றம், பஷீர்கான், துணை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, நாடக ஆசிரியர் உமேஷ், ஓவிய ஆசிரியை சித்ரா, ஆவண காப்பாளர் அலாஸ்கா ஆகியோர் வருகை புரிந்து சிறப்பித்தனர். ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவி ஈஸ்வரி நன்றி கூறினார். ஆசிரியைகள் அகிலா, சித்ரா, மனோன்மணி, அனுசியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், சிடார் மைய தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ராஜ வடிவேல், சுகுமாறன், விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.