இன்று தைப்பூசம் என்பதால், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு திடீரென பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. எனவே, பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்று தைப்பூசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தீவிர பரிசோதனைக்கு பின்னர் காவல்துறையினர் பக்தர்களை மலை ஏற அனுமதிக்கின்றனர்.