திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களின் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்னிலையில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்னவாகனம், பூதவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 6 ம் தேதி சூரசம்ஹாரம், ஏப்ரல் 7.ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 8.ம் தேதி மீனாட்சியம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 9 .ம் தேதி தேரோட்டம் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது