இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ தாக்குதல்களால் பாகிஸ்தான் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், ராணுவ தளபதி அசிம் முனீரின் எதிர்காலம் என்ன என்பதுதான். அவர் நீக்கப்படலாம் என்றுகூட செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தற்போது முனீரை ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் என்ன காரணம்? பாகிஸ்தானின் ராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் முனீர் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறாரா?
ஐஎஸ்ஐ-யில் குறுகிய காலம்:

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் (ஐஎஸ்ஐ) தலைவராக மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவர் என்ற பெயர் தற்போது ஃபீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டுள்ள ஜெனரல் அசிம் முனீருக்கு உண்டு. 2018-ல் அப்போதைய பிரதமர் இம்ரான் கான் முனீரை ஐஎஸ்ஐ தலைவராக நியமித்தார். ஆனால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இம்ரான்கானே முனீரை நீக்கினார். இதற்கு காரணம், இம்ரானின் மனைவி புஷ்ரா பீவி மீதான ஊழல் குறித்த தகவல்களை முனீர் வெளியிட்டதுதான்.
திரைமறைவில் நடந்த காய் நகர்த்தல்.
வெளியேற்றப்பட்ட முனீர், திரைமறைவில் காய்நகர்த்தத் தொடங்கினார். அதன் பலன் 2022 ஏப்ரலில் வெளிப்பட்டது. ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த பெரும் ஆட்சிக் கவிழ்ப்பில் இம்ரானின் பிரதமர் பதவி பறிபோனது. அதே ஆண்டு நவம்பரில் முனீர் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இம்ரான் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவி புஷ்ராவும் ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
புல்வாமா முதல் பஹல்காம் வரை: இந்தியப் பார்வையில் முனீர்
2019-ல் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது முனீர் ஐஎஸ்ஐ தலைவராக இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது, முனீர் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக உள்ளார். இதை இயல்பானது என்று இந்தியா ஒதுக்கித்தள்ள தயாராக இல்லை. ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் பாகிஸ்தான் அடைந்த அவமானங்களுக்கு மத்தியில் முனீர் ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு வந்துள்ளார். ராணுவத்திற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை மறைப்பதற்கான பாகிஸ்தானின் தந்திரமாக இதைப் பலரும் கருதுகின்றனர்.
அதிகாரத்தின் உச்சத்தில் முனீர்: விமர்சனங்களும், சவால்களும்
ராணுவம் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வரை தனது விருப்பமானவர்களை நியமிக்கும் வகையில் சட்டமியற்றுவதிலும் முனீர் தலையிட்டு ‘ஆட்சி’ நடத்தி வருகிறார். 2027 வரை தனது பதவிக்காலத்தை ‘சுயமாக நீட்டிக்கும்’ சட்டத்தையும் அவர் இயற்றியுள்ளார். பாகிஸ்தானின் ராணுவம், அரசியல் மற்றும் சட்டத் துறைகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இருப்பினும், பலுசிஸ்தானில் இருந்து கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் ரயில் கடத்தல் உள்ளிட்ட பல அவமானகரமான சம்பவங்களும் இதற்கு மத்தியில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.