




நீங்கள் எல்லோரும் அம்மா பேச்சை கேட்டு தப்பான பழக்கத்தையும் பழகாமல் நன்கு வாழ வேண்டும் என்பது தான் எனது மகனின் ஆசை அதனை நிறைவேற்றுங்கள் என மகனின் நண்பர்களிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த தாயார்.
மதுரை மாநகர் பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் முருகன் – பாண்டி செல்வி தம்பதியினருக்கு வினோத்குமார் ( 24 ) மற்றும் வினோதினி ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர் .

வினோத்குமார் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த நிலையில் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது ஆசைக்காக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு பைக்கில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையில் கிடந்த தென்னை மட்டையில் பைக் ஏறி இறங்கியது பைக் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் பைக்கை ஓட்டிச் சென்ற வினோத்குமாரின் நண்பருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வினோத்குமார் கிழே விழுந்தபோது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் முதற்சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்தார்.
கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உடலிம் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வினோத்குமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத்குமார் மூளைச்சாவு அடைந்ததாக கூறினர்
இதனைதொடர்ந்து வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து வினோத்குமாரின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு அவரது உடல் உறுப்புகள் மறுவாழ்விற்காக பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.

அப்போது மருத்துவமனையில் கூடியிருந்த வினோத்குமாரின் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடி கண்ணீர்மல்க அழுதனர். உடல் உறுப்புக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட போது வினோத்குமாரின் தாய் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு அவருடைய நண்பர்களை பார்த்து என் புள்ள நல்ல புள்ளையா இருந்தான் , நீங்களும் உங்க அம்மாவிற்கு புடிச்ச மாதிரி எந்த தப்பான பழக்கமும் இல்லாமல் நல்ல பிள்ளையா இருங்க அவனோட ஆசையும் அதுதான் உங்கள கையெடுத்து கும்பிடுகிறேன் என்று கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

