மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால் கட்டணம் குறைந்து விடுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 100 யூனிட் வரை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர், மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை.