• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

Byவிஷா

Mar 10, 2025

தமிழகத்தில் நாளை நெல்லை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்கண்ட வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு
மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும்
உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை ஃ வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார் குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர்களை மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்ல தொலைபேசி எண்கள் 1077, 04633 – 290548 செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.