• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அண்ணாவிற்கு பிறந்த நாள் கொண்டாடும் தகுதி அதிமுக-விற்கு மட்டுமே உள்ளது. அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பேச்சு…

ByG.Suresh

Sep 16, 2024

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவகோட்டை ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சருகணியில் ஒன்றிய செயலாளர் AT. முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் PR. செந்தில் நாதன் எம் எல் ஏ ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீட்டு ஈர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 7500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வந்த காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்தினாலே நான்கு மாவட்டங்களில் விவசாயம் செழித்து நான்கு லட்சம் விவசாயிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் பெற்று உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ளும் நிலையை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று கையேந்தி வருகிறார்.

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அதிமுக-விற்கு மட்டுமே உள்ளது. தனது தந்தை கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள் வைத்தது மட்டுமில்லாமல் கடலில் 75 கோடியில் பேனா சிலை வைக்கிறார். பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் தென்னாட்டு பெர்னாட்ஷா இந்நாட்டு இங்கர்சால் என்று உலகத் தலைவர்களை பிரமிக்க வைத்த பேரறிஞர் அண்ணாவின் பேனாவிற்கு ஏன் சிலை வைக்கவில்லை என்று பேசினார்.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களையும், அரசு ஊழியர்களையும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வெற்றி பெற்றார். ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை மறந்து விட்டனர். இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தினமும் ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டு மதுபானக் கடைகளை மட்டுமே திறந்து தமிழகம் முழுவதும் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் நடக்கும் மாநிலமாக மாற்றியுள்ளனர். இவற்றை எல்லாம் ஒழித்து மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுக அரசு அமைய வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் அதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, பாசறை மாவட்ட செயலாளர் பணக்கரை பிரபு,தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் தசரதன், செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.