• Thu. May 9th, 2024

பிப்.14ஆம் தேதி திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Byவிஷா

Feb 12, 2024

பிப்ரவரி 14ஆம் தேதியன்று, திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் கடற்கரை ஓரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் 2 ம் படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. மற்ற 5 அறுபடைவீடுகளும் மலைகளில் தான் அமைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
உற்சவங்களும், திருவிழாக்களும் களைகட்டும். அந்த வகையில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் வருகை தருவர். மாசித் திருவிழா பிப்ரவரி 14 ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 4.30 மணிக்கு திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படும்.
5 ம் நாளில் அதாவது பிப்ரவரி 18 ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், 20 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் காண கண்கோடி வேண்டும். காலை 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார். ,தற்கான விழா ஏற்பாடுகள், பக்தர்களுக்கான பாதுகாப்பு இவைகளுக்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இப்போதே விழாக்கோலம் பூண்டு திருவிழாக்காண தயாராகி வருகிறது திருச்செந்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *