டெல்லி முதல்வர் அரவிந்த்கேஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மான் இரு முதல்வர்களும் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் ஜன. 22-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவுக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் குடும்பத்துடன் மற்றொரு நாளில் பால ராமரை தரிசிப்பதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களது குடும்பதினருடன் அயோத்தியில் உள்ள பால ராமர் கோயிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கேஜ்ரிவால் கூறுகையில், “நான் எனது மனைவி,குழந்தைகள், பெற்றோருடன் சென்று ராமரை தரிசிக்க விரும்புகிறேன். பிராண பிரதிஷ்டை நிகழ்வுகள் முடிந்த பிறகு நாங்கள் செல்வோம்’’ என்று கூறினார்.
முன்னதாக உபி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக், மாநில சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் ராமர் கோயிலுக்கு நேற்று சென்று வழிபாடு நடத்தினர். அப்போது உள்ளூர் மக்கள் அவர்கள் மீது பூக்களை தூவி வாழ்த்தி வரவேற்றனர்.
இதனிடையே அயோத்திக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. ராமரை தரிசிக்க ஏதுவாக அதிக யாத்திரை ரயில்களை ஏற்பாடு செய்ய முயற்சிப்போம் என்று கேஜ்ரிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.