சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை மூலம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,மெட்ரோ நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் என்ற பெயரில் சில மோசடி ஆசாமிகள் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மெட்ரோவில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே கிடையாது. பயணச்சீட்டு பரிசோதனை என்ற பெயரில் தங்களை அணுகுவோரிடம் பயணிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இது தொடர்பான புகாரின் பேரில், காவல் துறை மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அதேபோல், பயண அட்டைகள், டோக்கன்கள், க்யூ ஆர் குறியீடு போன்ற சென்னை மெட்ரோ ரயில் நிலைய பயண அட்டைகள், மெட்ரோ நிலையங்களிலுள்ள தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலம் மட்டுமே நுழைவு மற்றும் வெளியேற்றத்தின்போது பரிசோதனை செய்யப்படும். ஒருவேலை தானியங்கி இயந்திரத்தில் நுழைவு மற்றும் வெளியேற்றத்தின்போது பிரச்னை ஏற்பட்டால், மெட்ரோ நிலையங்களிலுள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே அவைகள் சரி செய்து தரப்படும். வேறு எந்த வகையிலும் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.