கோவை, மார்ச் 4: வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி. ஆர். எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சி. ஆர். சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரி திரு. சங்கேத் பல்வந்த் வாகே, அவர்கள் ரிப்பன் வெட்டு அரங்கத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சி . ஆர். எஸ். நினைவு அறக்கட்டளை நன்கொடையாளர்கள், கோயம்புத்தூர் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கம் உறுப்பினர்கள் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக் அமைப்பின் தலைவராக பணியாற்றிய மறைந்த சி. ஆர். சுவாமிநாதனின் நினைவாக நிறுவப்பட்ட இவ்வறக்கட்டளை, அரசுப் பள்ளிகளில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகளை நீக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகப் பின்னணியிலுள்ள மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும்.
வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இவ்வரங்கம், பள்ளிக் கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் நடத்த பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவில்பாளையம் சர்க்கார் சாமகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறந்தவெளி அரங்கம் அமைத்தல், கணினி, வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான நவீன ஆய்வகக் கட்டிடம் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்கள் மாணவர்களுக்கு வளமான கல்விச் சூழலை உருவாக்குவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணைபுரியும் என குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஏ வி குழும நிறுவனங்கள் தலைவர் ஏ வி. வரதராஜன், ஜி ஆர் டி-சிபிஎஃப் மேல்நிலை மெட்ரிகுலேஷன் பள்ளி தலைவர் டி. விதயபிரகாஷ், ராக் அமைப்பின் நிறுவனரும், சி.ஆர்.ஐ பம்ப்ஸ் தலைவருமான ஜி. சௌந்தரராஜன், சி ஆர். எஸ். அறக்கட்டளை குழுத் தலைவர் ஆர். ஆர் .பாலசுந்தரம், ராக் தலைவர் சி. பாலசுப்பிரமணியன், மோப்பரிபாளையம் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார், பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







