தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டேக்’ புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தானியங்கி இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ‘பாஸ்டேக்’ விதிமுறைகளில் மத்திய அரசு அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் (என்பிசிஐ) சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை இன்று (பிப்ரவரி 17) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குறைந்த இருப்பு, தாமதமான பணம் செலுத்தல் அல்லது தடைசெய்யப்பட்ட டேக் வைத்துள்ள பயனர்களுக்கு இனி கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாகனம் டோலைக் கடக்கும் முன்பாக 60 நிமிடங்களுக்கு மேல் ‘பாஸ்டேக்’ செயலிழந்திருந்தாலோ, கடந்து சென்ற பிறகு 10 நிமிடங்கள் வரை செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். இதற்கான பிழைக் குறியீடு 176 (error code 176) ஆக இருக்கும். இது, இன்று முதல் அமலாகிறது. புதிய வழிகாட்டுதல் விதிகளின்படி, டோல் ரீடரை கடந்து செல்லும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு மேல் சுங்கவரி பரிவர்த்தனையின் செயலாக்கம் நடைபெற்றால்’பாஸ்டேக்’ பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.
புதுப்பிக்கப்பட்ட நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் (இன்இடிசி) வழிகாட்டுதல்களின்படி, ஒரு பரிவர்த்தனை தாமதமாகி, பயனரின் ‘பாஸ்டேக்’ கணக்கில் போதுமான இருப்பு இல்லையென்றால் அதற்கு இனி டோல் ஆபரேட்டரே பொறுப்பாவார். பயணத்திற்கு முன் ‘பாஸ்டேக்’ வாலெட்டில் போதுமான இருப்பையும், பரிவர்த்தனை செயல்பாட்டையும் பயனாளர்கள் உறுதி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பு பயனர்கள் தங்களது பாஸ்டேக்கை டோல் கேட்டில் ரீசார்ஜ் செய்து அதனைக் கடந்து செல்லும் வசதி இருந்தது. ஆனால், தற்போது புதிய அமலாகியுள்ள விதிமுறையில் பயனர்கள் தங்களது ‘பாஸ்டேக்’ நிலையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.