சென்னை தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியை தமிழ்ச்செல்வி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பல்லாவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி முன்னிலையில், தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்ச்செல்வி, தாம்பரம் பகுதியில் மக்களின் முக்கிய குறைகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கழிவு நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால், நன்னீரில் கழிவு நீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தான் வெற்றி பெற்றால், முதன்மையான பணியாக கழிவு நீர் மேலாண்மை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.
மேலும், கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க தவறியுள்ளதாகவும், இலவச திட்டங்களை அறிவித்ததைக் கடந்துச் செயல்பாடுகள் இல்லையெனவும் விமர்சித்தார். இதனால், “யார் வந்தாலும் எங்களுக்கு என்ன பயன்?” என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தாம்பரம் தொகுதியில் இந்த தேர்தல், அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலக் கோரிக்கைகள் மையமாகக் கொண்டு நடைபெற உள்ளது.




