




தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள். தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் வடமதுரை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டிய இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாங்கள் திருடிய 4 சக்கர வாகனத்தில் திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி அருகே வந்துள்ளனர். அந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஷிப்ட் டிசையர் காரில் வந்த கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சேர்ந்த வெங்கடேசன் மகன் தன்ராஜ் (எ) தேவ் (வயது 28), மற்றும் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் (வயது 24), திருப்பத்தூர் பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சுதாகர் (வயது 45) ஆகியோரை விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருட்டு காரில் வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர். அவர்கள் திருடிய வெள்ளி குத்துவிளக்கு, வைர நெக்லஸ், ரூ.40 பணம், செல்போன்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார் மற்றும் மங்கி குல்லா, கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடங்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களை 4 மாநில காவல் துறையினர் 2 வருடங்களாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

