திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் இன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை கோட்டம் மூலமாக அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட அவனியாபுரம் திட்ட பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் (G+3) மேம்பாட்டு வசதியுடன் 732.21 லட்சம் செலவில் ஒன்றிய மற்றும் மாநில நிதி ஆதாரங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 334 சதுர அடி கட்டுமான பரப்பில் பல்நோக்கு அறை படுக்கையறை,சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்புக்கான மதிப்பீடு 11.44 லட்சம் அதில் பயனாளி பங்கு தொகை ஒரு லட்சம் ஆகும்.
இத்திட்ட பகுதியில் கான்கிரீட் சாலை குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, மழைநீர் சேமிப்பு அமைப்பு மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன பயனாளிகளால் குடியிருப்பு நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நன்முறையில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்ட பகுதியில் உள்ள 64 குடியிருப்புகளானது திட்டப்பகுதியில் ஏற்கனவே வசித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 59 பயனாளிகள் தங்களின் முழு பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ளனர். இத்திட்ட பகுதி மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அவர்களால் இன்று திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தி 59 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.