போதைப்பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில், அரசால் தயாரிக்கப்பட்டுள்ள DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.
போதைப்பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டுள்ள DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சிங கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா, முன்னிலையில் இன்று (12.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..,
போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 151 பள்ளிகளிலும், 40 அனைத்துவகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் (ANTI DRUG CLUB) அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ மாணவிகளிடையே பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் குறித்து அரசிற்கு தகவல் தெரிவிக்க தமிழ்நாடு அரசால் DRUG FREE TN செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கோரப்படாது.இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது.
போதைப்பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து உங்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் அவர்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால அவற்றையும் பதிவேற்றம் செய்தால், உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் போதைப்பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும்.
எனவே, இந்த செயலி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த செயலியை மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடமும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இதுகுறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ஊராட்சி ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வு பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி 25.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் நிகழ்வில் முதல் பரிசாக ரூ.15,000ம், இரண்டாம் பரிசாக ரூ.10.000ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000ம் வழங்கப்படும். இதில் தேர்வானவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1,00,000ம், இரண்டாம் பரிசாக ரூ.75.000ம், மூன்றாம் பரிசாக ரூ.50,000ம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகாம்பாள், கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) சிவா மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.