வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. மூன்று நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் முதல் நாளில் கரகம் எடுத்தல் இரண்டாம் நாளில் கயிறு குத்துதல், அலகு குத்துதல் , அக்னிசட்டி எடுத்தல், முடிகாணிக்கை, உள்ளிட்ட நேர்த்திகடன்கள் செலுத்தினர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூன்றாம் நாளில் பால்குடம் எடுத்து முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து மகா காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலை அணிந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி முக்கிய விழாவாக நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
