கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் வழிமுறை நெறிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வாசுதேவன், திண்டுக்கல்லைச் சேர்ந்த அருணகிரி ராஜன் மற்றும் ராம்நாடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, புரவி எடுத்தல், நடன நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரி சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் மனு தாக்கல் செய்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மனுக்களை பரிசீலனை செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
எனவே, கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, புரவி எடுத்தல், நடன நாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். ” என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி. இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட வழிமுறை நெறிகாட்டுதல்களை பின்பற்றி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மனுதாரர்களின் மனுக்களை பரிசீலனை செய்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.