ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள் ஆகிய திட்டப்பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .
இந்த நிகழ்வில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில்,
ஜப்பான் ஜைக்கா நிதி நிறுவன உதவியுடன் இது போன்ற கட்டடப் பணிகள் நடைபெறுகின்றன. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று திறக்கப்பட்ட கட்டடம் போன்று, கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை KMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இது போன்று ஜைக்கா நிதி உதவியுடன் நடைபெற்று வரும் கட்டடப் பணிகள், இரண்டு மாதங்களில் நிறைவுற்று, பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
ஜப்பான் சென்றிருந்த போது, ஜைக்கா நிதி நிறுவனத் துணைத் தலைவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் உடனடியாக நிதியை விடுவிக்கச் சொன்னோம்.
நேற்றைக்கு முன் தினம், பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு நிதியுடன் கட்டப்பட்டவை.
ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள், ஜைக்கா நிறுவனத்திற்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் மதுரை எய்ம்ஸ் பணிகளை முன் கூட்டியே துவங்கி இருக்கலாம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிக்கு மார்ச் இறுதிக்குள் டெண்டர் உறுதி ஆகி விடும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கான Nodal officer ஐ நியமித்து இருக்கிறார்கள் என தனது பேட்டியில் தெரிவித்தார்.