சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் 6 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், எல்.முருகன் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய மந்திரியாக பதவி வகித்து வந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடம் காலியானது. அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளராக எல்.முருகனை கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி கடந்த 21ம் தேதி மத்திய பிரதேசம் சென்ற எல்.முருகன், வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.
எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.