• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வக்ஃபு வாரிய மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு – மக்களவையில் எதிர்கட்சிகள் அமளி

ByP.Kavitha Kumar

Feb 13, 2025

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, வக்பு (திருத்தம்) மசோதா, 2024 இன் கூட்டுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை கூட்டுக்குழு உறுப்பினர் மேதா குல்கர்னி தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி எம்பிக்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததை அடுத்து, அவர் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புக் குறிப்புகள் தணிக்கை செய்யப்பட்டதாக அவை விமர்சித்தன. இதையடுத்து, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சபையை இரவு 11:20 மணி வரை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து, மீண்டும் அவை கூடியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, அதில் இருந்த எதிர்க்கட்சி எம்பி.க்களின் எதிர்ப்புக் குறிப்புகளை நீக்கி உள்ளது. அதேநேரத்தில், வெளியில் இருந்து வந்தவர்களின் கருத்துகளைச் சேர்த்துள்ளது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. இத்தகைய அறிக்கையை தாக்கல் செய்ய சபை அனுமதிக்காது” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அனைத்து எதிர்ப்புக் குறிப்புகளும் அறிக்கையின் பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், “நீங்கள் ஏன் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? எதிர்ப்புக் குறிப்புகளின் எந்தப் பகுதியும் நீக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார். குஜராத்தில் தொழிலதிபர் ஒருவருக்கு ஆலை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அரசு தனது சொந்த நலனுக்காகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ், டிஎம்சி மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம் பிர்லா, நடவடிக்கைகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவையின் மரபைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.