நற்றிணைப் பாடல் 129:
பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே அதன்தலை
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே
பாடியவர்: ஒளவையார்
திணை: குறிஞ்சி
பொருள்:
தோழி! இதைக் கேள். ஒரே சிரிப்பாக வருகிறது. நீ பொம்மல் ஓதி. உன் காதலர் ஒரு நாள் வராவிட்டாலும் உன் உயிரைப் பிரித்து வைத்துவிட்டது போல இருப்பாய். அப்படி இருக்கும்போது நம்மை இங்கே தனியே கிடக்கும்படி விட்டுவிட்டு அவர் மட்டும் செல்லப்போகிறாராம். அவர் பொருளீட்டிக்கொண்டு திரும்பும் வரையில் நாம் நம் வீட்டிலேயே வாழவேண்டுமாம். அத்துடன் படமெடுத்து ஆடும் பாம்பு நடுங்கும்படி நள்ளிரவில் முழங்கும் இடி ஒலியைக் கேட்டுக்கொண்டே உயிர் வாழ வேண்டுமாம். – இவ்வாறு தலைவன் சொல்வதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.